Thursday, January 17, 2013

இன்னுமொரு வருடம்



புதுவருடம் பிறந்து ஒரு மாதம் முடியப்போகிற இந்த நேரத்தில் தான் ‘ரிவைண்ட்’ பதிவு எழுதுகிற நேரம் வாய்த்திருக்கின்றது. ”எப்படி எழுதுவது?” என்ற கேள்விக்கு சுஜாதாவின் பதில் “முதலில் எழுத ஆரம்பியுங்கள்.” என்பதாக படித்த நினைவு. ஓராண்டிற்கு முன் ஆரம்பித்த இந்த வலைப்பூவில் நான் எழுதியது மிகக்குறைவே. எழுத நினைக்கும் போதே ஒருவித சலிப்பு வந்து ஒட்டிக் கொள்கிறது. இந்த எழுத்து யாருக்காக? என்ற கேள்வியே அந்த சலிப்பின் மையம். சரி எனக்காக எழுதுகிறேன் என்று மறு பதில் கொடுத்தாலும், அதை ஏன் பொதுவெளியில் எழுத வேண்டும் ? உன்னுடைய நாட்குறிப்பிலேயே எழுதலாமே ? (நாட்குறிப்பையும் தொடுவதில்லை என்பது தனிக்கதை!!!) என்று சோம்பலில் சுகம் காணும் மனம் குறுக்கு கேள்விகளால் என்னை எழுத இயலாமல் செய்து விடுகிறது. நல்ல எழுத்தை இணையத்தில் வாசிக்கையில் எழுத வேண்டுமென்கிற விருப்பம் தோன்றி மெல்ல அது நீர்த்துப்போகும். இந்த புது வருடத்தில் வழக்கமான புத்தாண்டு உறுதிமொழியாக இல்லாமல் வாரம் ஒரு முறையாவது இங்கு எழுதிவிட வேண்டும் என நினைக்கிறேன். எல்லா தயக்கங்களையும் களைந்துவிட்டு எழுதுவதற்கு தடையாயிருக்கிற கேள்விகளையெல்லாம் புறந்தள்ளி எழுத வேண்டும். சென்ற ஆண்டில் புத்தகங்கள் படித்தது குறைவு. ஆனாலும் சிறந்த சில புத்தகங்கள் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாங்கி வைத்த புத்தங்களை தூசி படிவதற்குள் வாசித்துவிட வேண்டும்.

2012 எனக்கு மிக முக்கியமான வருடமாக இருந்திருக்கிறது. என் திருமணம், எனக்கு இன்னும் பொறுப்பையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கணிசமான நண்பர்களை சந்திக்க முடிந்தது. நல்லதும் கெட்டதுமான வாழ்விற்கு நன்றி.