Monday, September 9, 2013

கால்களற்றவனின் கவிதை

வாழ்க்கை நம்மிடம் எப்போதும் கருணையை மட்டுமே பரிசளித்துக் கொண்டிருப்பதில்லை நம்மைப் போலவே. கூட்டத்தில் நடுவிலேயும் தனித்த மனதோடு திரிதல் துயரம். எல்லா விஷயங்களையும் நம்மால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை, புறக்காரணிகள் பலவற்றையும் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. யதார்த்தத்தின் புரிதல் இருப்பினும் விளைவுகளை கடந்து செல்வது அவ்வளவு எளிதான ஒன்றாக இருப்பதில்லை. மனதில் பூதக்கண்ணாடி சிறிய துயரத்தையும் பெருக்கி அதன் முடிவற்ற பதிவுகளால் நம்மை அலைகழிக்க வைக்கிறது. இதே தர்க்கம் சந்தோஷத்தில் செல்லுபடியாவதில்லை. மனம் சந்தோஷத்தை மட்டும் அதே அளவோடு ஒரு கருமியின் லாவகத்தோடு கையாள்கிறது. இந்த சமநிலையற்ற மனதின் விசித்திரங்கள் பல.


மேலே எழுதியதில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதில் எனக்கே நிறைய குழப்பங்கள் இருப்பதால் இதோடு ஃபுல் ஸ்டாப். எதையும் யோசிக்காமல் என்ன மனதில் தோன்றியதோ அதை அப்படியே எழுதியிருக்கிறேன். சந்தோஷமான மனநிலையில் இல்லாததால் இப்படி குழப்படியாக எழுத தோன்றியதோ என்னவோ. எதையோ சொல்ல ஆரம்பித்து வழிதவறிய குழந்தையின் மனநிலையோடு முடித்து விட்டிருக்கிறேன். பரவாயில்லை அறுந்த இழையின் முனையை கண்டு பிடித்துவிட்டு பிறகு தொடர்ந்தால் போயிற்று.

-----------------------------------------------------------------------------------------------------

புத்தகங்கள் வாசிப்பது குறைந்து இப்போது இல்லாமலே ஆகிவிட்டது. என் பெயர் சிவப்பு வாசிக்க தொடங்கி இன்னும் முடிக்கப் படாமல் காத்திருக்கிறது. சீக்கிரமே வசீகரனை சந்திக்க வேண்டும். பிறகு பின்னிரவில் சாவகாசமாக துருக்கிய தெருக்களில் நடந்து சென்று தேநீர் அருந்த வேண்டும்.

----------------------------------------------------------------------------------------------------- 


என் உரைநடையின் வடிவம் வாசிப்பிற்கு நெருக்கமானதாக இல்லையோ என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. நாலைந்து பத்திகள் எழுதிவிட்டு இப்படி எதிர்பார்ப்பது எனக்கே ஓவராக தெரிகிறது. நிறைய எழுதிக்கொண்டே இருந்தால் தொடந்த பயிற்சியின் மூலம் ஒரு வடிவத்தை அடையலாம் என்பது புரிகிறது. பார்ப்போம். புனைவுகளில் முயன்று பார்க்க ஆசையிருக்கிறது. புனைவின் சுதந்திரம், அதன் கட்டற்ற தன்மை எனக்கு மிகவும் ஆர்வமூட்டுவதாகவும் உள்ளது. அ-புனைவை பொருத்தவரை எனக்கு சில தயக்கங்கள் இருக்கின்றன, இயல்பிலேயே கூச்ச சுபாவியான எனக்கு உறுதியான தரவுகளை முன்வைப்பது, அதை சரியானபடி நிறுவுவது போன்றவற்றை செய்ய பயமிருக்கிருக்கிறது அல்லது எப்படி செய்வது என்பது தெரியாமலிருக்கிறது. ஒரு வேளை வாசிப்பும் ,அனுபவமும் கற்று தரக்கூடும்.

-----------------------------------------------------------------------------------------------------

அக்டோபர் இறுதியில் ஊருக்கு போகிறேன்.மூன்று வாரக் குழந்தையாய் பார்த்து விட்டு வந்த என் மகன் கவினுக்கு இப்போது ஆறு மாதங்கள். இது எனக்கு ஸ்பெஷல் தீபாவளி. கவினுடன் பட்டாசுகள் வெடித்து நானும் என் பால்யத்திற்கு திரும்ப காத்துக் கொண்டிருக்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------

கடைசியாக இன்று முகநூலில் பதிந்த தலைப்பிடப்படாத எனது கவிதை,

கதவுகளற்ற வீடொன்றில்
தேநீர் அருந்தியபடி இருக்கிறான்
கால்களற்ற ஒருவன்.
மேசைக்கால்களில் உராய்ந்தபடி
நகர்கின்றன பூனைகள்.
உத்திரத்தின் வழியே கசியும் வெளிச்சம்
சர்ப்பமென அவன் மார்பில் நுழைகிறது.
இனிப்பில்லாத தேநீரின் மிச்சத்தை
தவிர்த்து பறக்கிறது ஈயொன்று
தூரத்து நாய்களின் குரைப்பில்
காதுவிடைத்து அவன்
பூனைகளை பார்க்கிறான்.
மெல்ல விரியும் வெளிச்சம்
வீட்டை நிறைத்து
வாசலில் வழிகிறது

Sunday, March 10, 2013

வா !



உன் பிஞ்சு
கால்களின்
வாசம் பிடிக்க
இங்கே
காத்துக்கிடக்கிறான்
உன் அப்பன்
வா !



பஹ்ரைன் - சில 'கிளிக்'க்குகள்











Thursday, January 17, 2013

இன்னுமொரு வருடம்



புதுவருடம் பிறந்து ஒரு மாதம் முடியப்போகிற இந்த நேரத்தில் தான் ‘ரிவைண்ட்’ பதிவு எழுதுகிற நேரம் வாய்த்திருக்கின்றது. ”எப்படி எழுதுவது?” என்ற கேள்விக்கு சுஜாதாவின் பதில் “முதலில் எழுத ஆரம்பியுங்கள்.” என்பதாக படித்த நினைவு. ஓராண்டிற்கு முன் ஆரம்பித்த இந்த வலைப்பூவில் நான் எழுதியது மிகக்குறைவே. எழுத நினைக்கும் போதே ஒருவித சலிப்பு வந்து ஒட்டிக் கொள்கிறது. இந்த எழுத்து யாருக்காக? என்ற கேள்வியே அந்த சலிப்பின் மையம். சரி எனக்காக எழுதுகிறேன் என்று மறு பதில் கொடுத்தாலும், அதை ஏன் பொதுவெளியில் எழுத வேண்டும் ? உன்னுடைய நாட்குறிப்பிலேயே எழுதலாமே ? (நாட்குறிப்பையும் தொடுவதில்லை என்பது தனிக்கதை!!!) என்று சோம்பலில் சுகம் காணும் மனம் குறுக்கு கேள்விகளால் என்னை எழுத இயலாமல் செய்து விடுகிறது. நல்ல எழுத்தை இணையத்தில் வாசிக்கையில் எழுத வேண்டுமென்கிற விருப்பம் தோன்றி மெல்ல அது நீர்த்துப்போகும். இந்த புது வருடத்தில் வழக்கமான புத்தாண்டு உறுதிமொழியாக இல்லாமல் வாரம் ஒரு முறையாவது இங்கு எழுதிவிட வேண்டும் என நினைக்கிறேன். எல்லா தயக்கங்களையும் களைந்துவிட்டு எழுதுவதற்கு தடையாயிருக்கிற கேள்விகளையெல்லாம் புறந்தள்ளி எழுத வேண்டும். சென்ற ஆண்டில் புத்தகங்கள் படித்தது குறைவு. ஆனாலும் சிறந்த சில புத்தகங்கள் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாங்கி வைத்த புத்தங்களை தூசி படிவதற்குள் வாசித்துவிட வேண்டும்.

2012 எனக்கு மிக முக்கியமான வருடமாக இருந்திருக்கிறது. என் திருமணம், எனக்கு இன்னும் பொறுப்பையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கணிசமான நண்பர்களை சந்திக்க முடிந்தது. நல்லதும் கெட்டதுமான வாழ்விற்கு நன்றி.

Thursday, November 29, 2012

பொன்மொழி

என் பள்ளி நாட்களில் காலை ப்ரேயரில் மாணவர்கள் பொன்மொழி சொல்வது வழக்கம். வருகை பதிவேட்டில் உள்ள வரிசைப்படி ஒவ்வொரு மாணவனின் முறை வரும். தெய்வசிகாமணி என்கிற என் வகுப்பு தோழன் என்னிடம் வந்து அவன் நாளை ப்ரேயரில் சொல்வதற்கு எளிதான பொன்மொழி ஒன்று சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். நானும் ”மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்கிற பொன்மொழியை சொல்லி கொடுத்தேன். விடுதியில் இரவு முழுவது அதை மனப்பாடம் செய்து கொண்டிருந்தான்.

காலை ப்ரேயர்

மாணவர்களும், ஆசிரியர்களும் குழுமியிருந்தனர்.

தெய்வசிகாமணி தன் திருவாய் மலர்ந்தான்..

”பொன்னுவதெல்லாம் மின்னல்ல”

Thursday, June 28, 2012

உள்ளொளி

அறச்சீற்றத்தோடு கவிதை எழுத அமர்கையில்
குழந்தை அழுதது
விளையாட்டு காட்டிவிட்டு வந்து
குறைச்சீற்றத்தோடு துணுக்காவது எழுதலாமென்றால்
பால்காரன் வந்துவிட்டான்
நுரைச்சீற்றத்தோடு காஃபி போட்டுவிட்டு
மன எழுச்சிக்காக பாத்ரூம் போனேன்.

Tuesday, March 13, 2012

வாசிப்பு என்றொரு போதை

அய்யனாரின் கட்டுரையைப் படித்தவுடன் திருவண்ணாமலை நாட்கள், நூலகங்கள், வாசிப்புகள் என கலவையான நினைவுகள் ஆரம்பித்து விட்டது.

நான்காவது அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன். வீட்டிற்கு தபாலில் குமுதம் வரும், புரியாவிட்டாலும் அதில் வரும் துணுக்குகளை எழுத்துக்கூட்டி படிப்பேன். அப்போது ப்ளாண்டி என்று ஒரு சித்திரக்கதை தொடர் வந்துகொண்டிருந்தது. அது மட்டும் படித்த ஞாபகம் இருக்கிறது. பிறகு உயர்நிலை பள்ளி நாட்களில் பாக்கெட் நாவல்கள், ராணி, கண்மனி, மாலைமதி, ராணிமுத்து என்று போனது. பள்ளி இறுதியில் பாலகுமாரனில் வந்து நின்றிருந்தேன். தொடர்ந்து டிப்ளமோ திருவண்ணாமலயில் படிக்கும் போது நூலகங்கள் அறிமுகமாயின. டேனிஷ் மிஷன் பள்ளியின் எதிரேயிருந்த (இப்போது இடம் மாறி விட்டதாக நினைவு) மாவட்ட மைய நூலகம், அதே தெருவிலிருந்த கீதாஞ்சலி வாடகை நூலகம் என வாசிப்பின் பரப்பு விரிந்தது. பல நல்ல புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன். ஒரு வருட இடைவெளிக்கு பின் பொறியில படிப்பை தொடரும் போதும் இந்த இரண்டு நூலகங்களும் வாசிப்பின் ருசியை தக்கவைத்துக் கொள்ள உதவின.

என் கல்லூரிக்காலங்களில் என் வாசிப்பின் திசை மாறுவதை உணர்ந்தேன். சுதாஜா சலிக்க தொடங்கி இருந்தார். ஆனால் அவர் எழுத்தின் மூலமே இலக்கிய வாசிப்புக்கான குறிப்புகள் கிடைத்தன. திருவண்ணாமலையிலிருந்த நண்பன் சக்தி (எ) பிரசன்னா மூலம் கிடைத்த புத்தகங்கள் இன்னும் சில வாசல்களை என்னுள் திறந்தன. ஜே. ஜே. சில குறிப்புகள், ஸீரோ டிகிரி, சாயாவனம், வானம் வசப்படும் என நிறைய புத்தகங்களை வாசிக்க முடிந்தது. வேலைக்கென சென்னை வந்த பிறகு இன்னும் நிறைய வாசிப்பதற்கான வழி கிடைத்தது. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவு புத்தகங்கள் தாம். அசோக் பில்லர் பக்கத்தில் 10% கழிவோடு புத்தகங்கள் விற்கும் நிரந்தர கடையொன்று, லேண்ட்மார்க் என்று விரும்பிய புத்தகங்கள் வாங்கி வாசிக்க முடிந்திருக்கிறது.

இப்போதெல்லாம், நிறைய புத்தகங்கள் வாங்க முடிகிறது ஆனால் வாசிப்பதற்க்கான நேரம் குறைந்துவிட்டது. கல்லூரி படிக்கும் போது 600 க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட நாவலை மின்சாரம் இல்லாத இரவில் மெழுகுவர்த்தியின் உதவியோடு படித்து முடித்தது நினைவிற்கு வருகிறது. இப்போது அதே அளவு பக்கங்கள் கொண்ட ஆழிசூழ் உலகு வாசித்து முடிக்க இரண்டு வாரங்கள் ஆனது. ஆனாலும் புத்தங்களின் மீதான காதல் குறைவதில்லை. சிகரட் போல, மது போல இதுவும் ஒரு போதைதான் போலும்.

ஒவ்வொரு புத்தகமும் அது எழுதப்படுவதற்கு முன்பே அவற்றிற்க்கான வாசிப்பாளனை கண்டு கொள்கின்றது என்றே நினைக்கிறேன். புத்தகங்களோடு அலைந்து கொண்டே இருக்கும் என்னிடம் எப்போதும் யாரேனும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

”அப்படி என்னதான் இருக்கிறது புத்தகங்களில்?”

புன்னகைத்து விட்டு எனக்குள் சொல்லிக் கொள்கிறேன்.

”அதைத் தான் நானும் தேடிக் கொண்டேயிருக்கிறேன்.”