Showing posts with label பஹ்ரைன். Show all posts
Showing posts with label பஹ்ரைன். Show all posts

Wednesday, February 29, 2012

அயல் வாழ்வு


அயல்நாடுகளில் வேலை செய்வதைப் பற்றியும், அதன் சம்பாத்தியங்கள் குறித்தான மிகையான கற்பனையும் நம் மக்களுக்கு எப்போதும் உண்டு. ”திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது பழமொழி. இதன் பொருள் என்னவென்றால் பொருளீட்டுவதற்கு நில, தேச எல்லைகள் ஏதுமில்லை என்பதாகும். தகுதியான படிப்போடும், பணி அனுபவத்தோடும் இருப்பவர்களுக்கு இத்தகைய பணிச்சூழல் பெரிய விஷயமில்லை. ஆனால் கூலி தொழிளாலர்களாகவோ அல்லது குறைந்த சம்பளத்தில் அமர்த்தபடுபவர்களாகவோ இருப்பவர்களின் பாடு திண்டாட்டமானது. துயரமும், வலியும் நிறைந்தது.

முக்கியமாக, அமீரகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அரபு நாடுகளுக்கு பணி நிமித்தம் வருகின்றவர்களுக்கு தகுந்த அடிப்படை வசதிகளோ, சட்ட பாதுகாப்போ இருப்பதில்லை. இங்கே பஹ்ரனை பொருத்த வரையில் மற்ற நாடுகளை விட சற்று பரவாயில்லை எனலாம். தேவாலயங்கள், கோவில்கள் இருக்க அனுமதிக்கிறார்கள். (கோபுரங்கள் கொண்ட வழிபாட்டு தலங்களுக்கும் அனுமதியில்லை). கிருஷ்ணன், ஐயப்பன் கோவில்கள் என நம்மாட்களும் ஜமாக்கிறார்கள். மலையாளிகளால் இயங்குகிறது அரபு நாடுகள். ரோடு போடும் வேலையிலிருந்து, பெரும் முதலாளிகள் வரை அவர்கள்தாம்.

நான் முன்பு தங்கியிருந்த அறையின் அருகில் இருந்த ஓர் மளிகைக்கடையில் வேலை செய்யும் மலையாளி என்னோடு நன்றாக பழகுவார். நான் அப்போது தான் பஹ்ரைன் வந்திருந்த புதுசு. ஒரு நாள் அவருடைய பிண்ணனியை பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். தான் இருபது வருடங்களாக அரபு நாடுகளில் பணிபுரிந்து வருவதாக சொன்னார். இனிமேலாவது ஊருக்கு போய் குடும்பத்துடன் வாழலாமே என்றேன். சம்பாதித்த பணத்தையெல்லாம் தனது சகோதரைகளும், உறவினர்களும் ஏமாற்றிவிட்டதாகவும், இனிமேல் ஊருக்கு சென்று வாழ்வதற்கு எந்தவொரு வாழ்வாதாரமும் இல்லையென்றார்.

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் ஆசையில் ”விசா”வுக்கு இரண்டு லட்சம், மூன்று லட்சம் என்று கொடுத்துவிட்டு செல்பவர்களுக்கு அங்கு குறைந்த சம்பளத்தில், கடுமையான வேலைகள் தரப்படுகின்றன. இரண்டு, மூன்று வருடங்கள் வேலை செய்தாலும் விசாவிற்கு கொடுத்த தொகை கூட தேறுவதில்லை. கடைசில், நொந்து போய் வேதனையோடு வீடு திரும்புபவர்கள் தான் அதிகம்.

என் நண்பருக்கு தெரிந்த ஒரு தமிழர் இங்கு பஹ்ரைனில் இருந்தார். பத்து வருடத்திற்கு மேலாக இங்கிருந்த அவரின், விசாவும், பாஸ்போர்ட்டும் எப்போதோ காலாவதியாகி விட்டிருந்தது. போலீஸின் கண்களுக்கு சிக்காமல் கிடைக்கிற சின்ன சின்ன வேலைகள் செய்து காலம் தள்ளிக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவரை போலீஸ் பிடித்துவிட்டது, ரமலான் நோன்பு மாதத்தில் மது விற்றதிற்காக. (பஹ்ரைனில் மதுவிலக்கு இல்லையெறாலும், ரம்லான் மாதம் மட்டும் கடுமையாக கடைபிடிக்கபடுகிறது). பிறகு அவரை சிறையிலடைத்து கடுமையான சித்ரவதைக்கு பின்னர் இந்தியாவிற்கு அனுப்பப்ட்டார். இவரை போல நிறைய பேர் பாஸ்போர்ட், விசா காலவதியாகியும் இங்கு இருக்கிறார்கள். அப்படிபட்டவர்கள் “அவுட் பாஸ்” என்ற பெயரில் அவர்கள் இலவச விமான டிக்கட்டில் திரும்ப அனுப்படுகிறார்கள். இப்படி இருப்பவர்களில் பெரும்பான்மையினோர் பாங்களாதேஷ் நாட்டவர்கள்.

எவ்வளவு சொன்னாலும் வெளிநாட்டு வேலை மீதான மோகம் நம் மக்களுக்கு குறையபோவதேயில்லை. சுய அனுபவத்தால் மட்டுமே கற்று கொள்வார்கள் போல.

கடந்த ஒரு வாரமாக என் அலுவலகத்தின் பக்கத்தில் கொஞ்சம் பேர் கழிவுநீர் குழாய்கள் புதைக்க ஆளுயரத்திற்கு பள்ளம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடுமையான உடலுழைப்பை கோரும் பணி. 12 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்கிறார்கள். அவர்களை ஓய்வெடுக்க கூட விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறான் அவர்களுக்கு மேலிருப்பவன். வியர்வை வழிய, கம்பெனி கொடுத்த பளீர் ஆரஞ்சு நிற சட்டையணிந்தபடி என்னை பார்ப்பவர்களுக்கு ஒரு நட்பு புன்னகையைத் தவிர வேறெதுவும் தர முடியாதவனாய் கடந்து செல்கிறேன்.

நிழற்படங்கள் உதவி
p4papyrus.blogspot.com
www.limeasia.net