Sunday, March 10, 2013

வா !



உன் பிஞ்சு
கால்களின்
வாசம் பிடிக்க
இங்கே
காத்துக்கிடக்கிறான்
உன் அப்பன்
வா !



பஹ்ரைன் - சில 'கிளிக்'க்குகள்











Thursday, January 17, 2013

இன்னுமொரு வருடம்



புதுவருடம் பிறந்து ஒரு மாதம் முடியப்போகிற இந்த நேரத்தில் தான் ‘ரிவைண்ட்’ பதிவு எழுதுகிற நேரம் வாய்த்திருக்கின்றது. ”எப்படி எழுதுவது?” என்ற கேள்விக்கு சுஜாதாவின் பதில் “முதலில் எழுத ஆரம்பியுங்கள்.” என்பதாக படித்த நினைவு. ஓராண்டிற்கு முன் ஆரம்பித்த இந்த வலைப்பூவில் நான் எழுதியது மிகக்குறைவே. எழுத நினைக்கும் போதே ஒருவித சலிப்பு வந்து ஒட்டிக் கொள்கிறது. இந்த எழுத்து யாருக்காக? என்ற கேள்வியே அந்த சலிப்பின் மையம். சரி எனக்காக எழுதுகிறேன் என்று மறு பதில் கொடுத்தாலும், அதை ஏன் பொதுவெளியில் எழுத வேண்டும் ? உன்னுடைய நாட்குறிப்பிலேயே எழுதலாமே ? (நாட்குறிப்பையும் தொடுவதில்லை என்பது தனிக்கதை!!!) என்று சோம்பலில் சுகம் காணும் மனம் குறுக்கு கேள்விகளால் என்னை எழுத இயலாமல் செய்து விடுகிறது. நல்ல எழுத்தை இணையத்தில் வாசிக்கையில் எழுத வேண்டுமென்கிற விருப்பம் தோன்றி மெல்ல அது நீர்த்துப்போகும். இந்த புது வருடத்தில் வழக்கமான புத்தாண்டு உறுதிமொழியாக இல்லாமல் வாரம் ஒரு முறையாவது இங்கு எழுதிவிட வேண்டும் என நினைக்கிறேன். எல்லா தயக்கங்களையும் களைந்துவிட்டு எழுதுவதற்கு தடையாயிருக்கிற கேள்விகளையெல்லாம் புறந்தள்ளி எழுத வேண்டும். சென்ற ஆண்டில் புத்தகங்கள் படித்தது குறைவு. ஆனாலும் சிறந்த சில புத்தகங்கள் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாங்கி வைத்த புத்தங்களை தூசி படிவதற்குள் வாசித்துவிட வேண்டும்.

2012 எனக்கு மிக முக்கியமான வருடமாக இருந்திருக்கிறது. என் திருமணம், எனக்கு இன்னும் பொறுப்பையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கணிசமான நண்பர்களை சந்திக்க முடிந்தது. நல்லதும் கெட்டதுமான வாழ்விற்கு நன்றி.

Thursday, November 29, 2012

பொன்மொழி

என் பள்ளி நாட்களில் காலை ப்ரேயரில் மாணவர்கள் பொன்மொழி சொல்வது வழக்கம். வருகை பதிவேட்டில் உள்ள வரிசைப்படி ஒவ்வொரு மாணவனின் முறை வரும். தெய்வசிகாமணி என்கிற என் வகுப்பு தோழன் என்னிடம் வந்து அவன் நாளை ப்ரேயரில் சொல்வதற்கு எளிதான பொன்மொழி ஒன்று சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். நானும் ”மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்கிற பொன்மொழியை சொல்லி கொடுத்தேன். விடுதியில் இரவு முழுவது அதை மனப்பாடம் செய்து கொண்டிருந்தான்.

காலை ப்ரேயர்

மாணவர்களும், ஆசிரியர்களும் குழுமியிருந்தனர்.

தெய்வசிகாமணி தன் திருவாய் மலர்ந்தான்..

”பொன்னுவதெல்லாம் மின்னல்ல”

Thursday, June 28, 2012

உள்ளொளி

அறச்சீற்றத்தோடு கவிதை எழுத அமர்கையில்
குழந்தை அழுதது
விளையாட்டு காட்டிவிட்டு வந்து
குறைச்சீற்றத்தோடு துணுக்காவது எழுதலாமென்றால்
பால்காரன் வந்துவிட்டான்
நுரைச்சீற்றத்தோடு காஃபி போட்டுவிட்டு
மன எழுச்சிக்காக பாத்ரூம் போனேன்.

Tuesday, March 13, 2012

வாசிப்பு என்றொரு போதை

அய்யனாரின் கட்டுரையைப் படித்தவுடன் திருவண்ணாமலை நாட்கள், நூலகங்கள், வாசிப்புகள் என கலவையான நினைவுகள் ஆரம்பித்து விட்டது.

நான்காவது அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன். வீட்டிற்கு தபாலில் குமுதம் வரும், புரியாவிட்டாலும் அதில் வரும் துணுக்குகளை எழுத்துக்கூட்டி படிப்பேன். அப்போது ப்ளாண்டி என்று ஒரு சித்திரக்கதை தொடர் வந்துகொண்டிருந்தது. அது மட்டும் படித்த ஞாபகம் இருக்கிறது. பிறகு உயர்நிலை பள்ளி நாட்களில் பாக்கெட் நாவல்கள், ராணி, கண்மனி, மாலைமதி, ராணிமுத்து என்று போனது. பள்ளி இறுதியில் பாலகுமாரனில் வந்து நின்றிருந்தேன். தொடர்ந்து டிப்ளமோ திருவண்ணாமலயில் படிக்கும் போது நூலகங்கள் அறிமுகமாயின. டேனிஷ் மிஷன் பள்ளியின் எதிரேயிருந்த (இப்போது இடம் மாறி விட்டதாக நினைவு) மாவட்ட மைய நூலகம், அதே தெருவிலிருந்த கீதாஞ்சலி வாடகை நூலகம் என வாசிப்பின் பரப்பு விரிந்தது. பல நல்ல புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன். ஒரு வருட இடைவெளிக்கு பின் பொறியில படிப்பை தொடரும் போதும் இந்த இரண்டு நூலகங்களும் வாசிப்பின் ருசியை தக்கவைத்துக் கொள்ள உதவின.

என் கல்லூரிக்காலங்களில் என் வாசிப்பின் திசை மாறுவதை உணர்ந்தேன். சுதாஜா சலிக்க தொடங்கி இருந்தார். ஆனால் அவர் எழுத்தின் மூலமே இலக்கிய வாசிப்புக்கான குறிப்புகள் கிடைத்தன. திருவண்ணாமலையிலிருந்த நண்பன் சக்தி (எ) பிரசன்னா மூலம் கிடைத்த புத்தகங்கள் இன்னும் சில வாசல்களை என்னுள் திறந்தன. ஜே. ஜே. சில குறிப்புகள், ஸீரோ டிகிரி, சாயாவனம், வானம் வசப்படும் என நிறைய புத்தகங்களை வாசிக்க முடிந்தது. வேலைக்கென சென்னை வந்த பிறகு இன்னும் நிறைய வாசிப்பதற்கான வழி கிடைத்தது. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவு புத்தகங்கள் தாம். அசோக் பில்லர் பக்கத்தில் 10% கழிவோடு புத்தகங்கள் விற்கும் நிரந்தர கடையொன்று, லேண்ட்மார்க் என்று விரும்பிய புத்தகங்கள் வாங்கி வாசிக்க முடிந்திருக்கிறது.

இப்போதெல்லாம், நிறைய புத்தகங்கள் வாங்க முடிகிறது ஆனால் வாசிப்பதற்க்கான நேரம் குறைந்துவிட்டது. கல்லூரி படிக்கும் போது 600 க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட நாவலை மின்சாரம் இல்லாத இரவில் மெழுகுவர்த்தியின் உதவியோடு படித்து முடித்தது நினைவிற்கு வருகிறது. இப்போது அதே அளவு பக்கங்கள் கொண்ட ஆழிசூழ் உலகு வாசித்து முடிக்க இரண்டு வாரங்கள் ஆனது. ஆனாலும் புத்தங்களின் மீதான காதல் குறைவதில்லை. சிகரட் போல, மது போல இதுவும் ஒரு போதைதான் போலும்.

ஒவ்வொரு புத்தகமும் அது எழுதப்படுவதற்கு முன்பே அவற்றிற்க்கான வாசிப்பாளனை கண்டு கொள்கின்றது என்றே நினைக்கிறேன். புத்தகங்களோடு அலைந்து கொண்டே இருக்கும் என்னிடம் எப்போதும் யாரேனும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

”அப்படி என்னதான் இருக்கிறது புத்தகங்களில்?”

புன்னகைத்து விட்டு எனக்குள் சொல்லிக் கொள்கிறேன்.

”அதைத் தான் நானும் தேடிக் கொண்டேயிருக்கிறேன்.”

Wednesday, February 29, 2012

எப்போதும் தோழி

இதை முகநூலில் படித்ததாக நினைவு. இதென்ன புதுக்கவிதையா ?, ஹைக்கூவா ? இல்லை வார்த்தைகளை அடுக்கி வைத்த கருத்தா ?. எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டுமே. நன்றாக இருக்கிறது இல்லையா ? அவ்வளவுதான்.

முதல் குழந்தை
இரண்டாவது தாய்
கடைசிக் காதலி


இந்த வரிகள் பேசுவது மனைவியை பற்றியதாக இருக்கிறது. கொஞ்சம் அட்வான்ஸாக, காதலிக்கும் (காதலிகளுக்கு அல்ல) இதை பொருத்திப் பார்த்து சந்தோஷப்படலாம், அதாவது இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் காதலே இறுதியானது என்ற முன் நிபந்தனையுடன்.

படித்ததில் இருந்து இதில் ஏதோ ஒன்று குறைகிறதே என் தோன்றி கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு வரியை இப்படி சேர்த்த போது சொல்ல வந்த விஷயம் முழுமையடைந்ததாக தோன்றியது.

முதல் குழந்தை
இரண்டாவது தாய்
கடைசிக் காதலி
எப்போதும் தோழி